
ஆஸ்கர் விருது வென்ற யானைகள் பற்றி ஆவணக் குறும்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வஸுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.
தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ்.
இந்தநிலையில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் விருது வென்றது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
இதனிடையே, ஆஸ்கார் விருது பெற்ற "The Elephant Whisperers" ஆவணப்படத்தை உருவாக்கிய கார்த்திகி கோன்சால்வஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது, ஆஸ்கர் விருதை முதல்வரிடம் கார்த்திகி கோன்சால்வஸ் காண்பிடித்தார். இதையடுத்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.