இணைய உலகம்

யூடியூப்: இர்ஃபானுக்கு வாய்ப்பூட்டா?
இணைய உலகம்

தமிழகத்தின் நட்சத்திர யூடியூபர்களில் ஒருவர் முகமது இர்ஃபான். தனது ’இர்ஃபான்ஸ் வியூ’ சேனல் வாயிலாக நடைபாதை உணவகங்கள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை, உணவு ரகங்களை சுவைத்து அந்த அனுபவத்தை வீடியோவாக்கி பிரபலமானவர். உணவு ரகங்களைக் காட்டிலும் அதை ரசித்து ருசித்து, சிலாகிக்கும் இர்ஃபானின் அங்க சேட்டைகளுக்காகவும் தனியாக ரசிகர்கள் உண்டு.

சர்வதேச உணவு ரகங்களுக்காக விமானமேறி வெளிநாடுகளுக்குப் பறக்கும் அளவுக்கு யூடியூபில் சம்பாதிக்கவும், செலவிடவும் துணிந்தவர். வீடியோவுக்காக ஏடாகூடமான அசைவ ரகங்களை விழுங்கி மருத்துவமனையிலும் அனுமதியான அனுபவங்களும் இர்ஃபானுக்கு உண்டு. ஆனபோதும் உணவின் மீதான காதலையும், அவற்றை ருசிப்பதன் மகிழ்ச்சியையும் இர்ஃபான் கைவிட்டதில்லை.

இப்படியான இர்ஃபான் சில தினங்களுக்கு முன்பு துடித்துப்போனார். இவரது வீடியோக்களில் ஒன்று தங்கள் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக யூடியூப் நிர்வாகம் ‘இர்பான்ஸ் வியூ’ சேனலைத் தடை செய்தது. அவ்வளவுதான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது இதர சமூக ஊடகங்கள் வாயிலாக இர்ஃபான் பொங்கித் தீர்த்தார்.

அதிகமில்லை, இர்ஃபான் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அரை நாளில் யூடியூப் நிர்வாகம் அவரது சேனலைத் திரும்பக் கையளித்தது. அந்த அனுபவத்தையும் இர்ஃபான் ஓர் உணர்ச்சிகரமான வீடியோவாக்க, இந்த வாரத்தின் வைரல் வீடியோக்களில் இதுவும் ஒன்றானது. இந்த வைரல் வீடியோ மூலமாக, மடைமாறிப்போன தனது பழைய பார்வையாளர்களையும் மீளப் பெறத் தொடங்கியிருக்கிறார் இர்ஃபான்.

இன்ஸ்டாகிராம்: யாஷிகாவுக்கு கல்யாணம்?

சமூக ஊடகங்களில் பப்ளிகுட்டிக்காக அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புவோரில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கியமானவர். கடந்த வருடம் கார் விபத்தில் படுகாயமடைந்து, நீண்ட மருத்துவ போராட்டத்தில் மீண்டு வந்ததில் ரசிகர்களின் அபிமானத்தையும் கூட்டியிருக்கிறார். இவற்றை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியும் யாஷிகாவின் பதிவுகளில் இருக்கும்.

’எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்ற தலைப்பில் அடிக்கடி ரசிகர்களின் ஏடாகூட கேள்விகளுக்கு பதிலளிக்கும் முயற்சியில் சர்ச்சையைக் கிளப்புவதும் இவரது வாடிக்கை. சில தினங்களுக்கு முன்பாக அப்படியான அமர்வில், ’கார் விபத்தில் தோழியைப் பறிகொடுத்த நிகழ்வில் நீங்கள் குடித்திருந்தது உண்மையா? உடன் பயணித்த உங்கள் தோழியைக் கொன்றுவிட்டதாக குற்ற உணர்வு இல்லையா?’ என்றெல்லாம் ஒருவர் கேள்விகளால் துளைக்க, ‘அந்த விபத்தில் நானும் செத்துப் போயிருக்க வேண்டும்’ என்று விரக்தியாக பதிலளித்து ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்தார் யாஷிகா.

இது நடந்த சில தினங்களிலேயே, இன்ஸ்டாகிராம் வாயிலாக தனது கல்யாண சேதியை பவ்யமாக ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார் யாஷிகா ஆனந்த். அன்று இரவே ’ஏப்ரல் ஃபூல்’ செய்தேன் என்றும் வழிந்தார். ஆனால், யாஷிகாவின் கல்யாண அறிவிப்பு செய்திக்கு ரசிகர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், ’பெற்றோர் பார்த்து வைத்த திடீர் ஏற்பாட்டுத் திருமணம்’ என்றெல்லாம் அதில் அள்ளி விட்டிருந்தார் யாஷிகா. கடைசியில் ரசிகர்களின் கணிப்பே பலித்தது. இன்னும் 10 வருடத்துக்கு திருமணம் குறித்த திட்டமே கிடையாது என்று தற்போது வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கிளப் ஹவுஸ்: கதை பேசும் பாத்திமா

கிளப் ஹவுஸ் அறிமுகமான புதிதில் ஆளாளுக்கு ’அறை’ கூட்டி அக்கப்போர் நடத்தினார்கள். அங்கே பேச அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று போட்டி அறை கூட்டியும் திட்டித் தீர்த்தார்கள். கூடவே விடிய விடிய சினிமாப் பாட்டு பாடியவர்கள், அரசியல் - சினிமா என குழாயடிச் சண்டைகள் என ஆரம்ப ஜோரில் கிளப் ஹவுஸின் தமிழ் பேசும் நல்லுலகு களைகட்டியது.

எல்லாம் சில நாட்கள்தான். பெரும்பாலானோர் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கம் ஒதுங்க, கிளப் ஹவுஸ் காற்றாட ஆரம்பித்தது. ஆள் பிடிக்கும் எம்எல்எம் பாணி குழுக்களும், வயது வந்தோருக்கான ஜொள்ளர் குழுக்களுமாய் அவ்வப்போது கிளப் ஹவுஸ் எழுந்தடங்கி வருகிறது.

கிளப் ஹவுஸின் பயன்பாட்டை உணர்ந்து அர்த்தமுள்ள வகையில் அதனைப் பயன்படுத்தி வருவோரில் பாத்திமா பாபுவும் ஒருவர். டிவி செய்தி வாசிப்பாளராக பொதுத் தளத்தில் அறிமுகமாகி பெரிய திரை முதல் சின்னத் திரை வரை தடம்பதித்திருக்கும் பாத்திமா பாபு, அடிக்கடி கிளப் ஹவுஸில் பிரச்சன்னமாகி கதை சொல்கிறார். முன்னனுமதியுடன், பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒலிச்சித்திரமாக தனது கிளப்பில் பகிர்கிறார் பாத்திமா.

தொழில்முறையில் அனுபவமிக்க செய்தி வாசிப்பாளர் என்பதால், சந்தா சந்தையில் கிடைக்கப்பெறும் குரல்வழிக் கதைகளைவிட பாத்திமா பாபுவின் கதை சொல்லல் ரசிக்க வைக்கிறது. சிறுகதையின் தலைப்பு, எழுத்தாளர் அறிமுகம், கதைக்கான முன்னுரை உள்ளிட்ட சுவாரசியமான தகவல்களை தனது முகநூல் பக்கத்தில் முன்கூட்டியே பகிர்ந்து விடும் பாத்திமா பாபு, கதை சொல்லல் முடிந்ததும் அந்த அனுபவத்தையும் முகநூலில் பகிர மறப்பதில்லை. சுமார் 180 கதைகளை தனது யூடியூப் பக்கத்திலும் வீடியோவாக பதிவேற்றி இருக்கிறார் பாத்திமா பாபு.

’சிறுகதை நேரம்’ என்ற பாத்திமா பாபுவின் கிளப் ஹவுஸ் சங்கத்தில் தமிழின் பிரபல எழுத்தாளர்களும் அங்கத்தினர்களாக உள்ளனர். ’தமிழ்க் கதைகள் இரண்டு சதவீத தமிழ் பேசும் மக்களைக் கூடச் சென்றடையவில்லை. இலக்கியம் மக்களைச் சென்று சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் அவற்றை பூட்டி வைத்தல் கூடாது’ வாசிப்பு அனுமதிக்காக தொடர்புகொண்டபோது, பாத்திமாவிடம் இப்படி ஆதங்கம் தெரிவித்தாராம் எழுத்தாளர் ஜெயமோகன். பாத்திமா பாபுவின் கதை சொல்லல் இந்த சதவீதத்தை இன்னும் சற்றேனும் கூட்டட்டும்.

கருத்து முத்துகள்

1. உங்களுக்குள் இருக்கும் திறமையை மற்றவர் கண்டறியும்போது தொழிலாளியாகவும், நீங்களே கண்டறியும்போது முதலாளியாகவும் மாறத் தொடங்குவீர்கள் @2Nandhi_twits

2. சில ’ஆப்பு’களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். சில ஆப்புகள் நம்மை தேர்ந்தெடுக்கின்றன @manipmp

3. நல்லவனாக ஒருவன் நடிக்க ஆரம்பிக்கும்போது, கெட்டவர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது @TRRAMESH21548526

4. வாழ்க்கையின் சில முக்கிய கேள்விகளுக்கான விடையை நீங்கள் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பும்போது, வாழ்க்கை தன் கேள்வியை முற்றிலுமாக மாற்றியிருக்கும் @urs_venba

5. பறக்க விரும்பாத பறவைக்கு இறக்கையும் பாரம்தான் @laksh_kgm

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in