‘ஜெய் பீம்’ படத்தை முன்னிறுத்தி, பாமகவும் வன்னியர் சங்கமும் நடிகர் சூர்யா மீது பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றன. அசம்பாவிதங்களைத் தவிர்க்க சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி இருக்கிறது அரசு. சூர்யாவுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்துதான் இப்போது சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்கள் நடக்கின்றன. இந்த விவகாரத்தில், இயக்குநர் வெற்றிமாறன் சூர்யாவின் பக்கம் நிற்பதும் பேசுபொருளாகி இருக்கிறது. கமல், ரஜினி, சீமான் போன்றவர்கள் ஏன் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விகளும் இணையத்தில் சூடு பறக்கின்றன. இதற்கிடையில், தனது ‘சபாபதி’ பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “திரைப்படங்களில் உயர்வு தாழ்வு கூடாது” என்று சொன்னது அவருக்கு எதிராகவே இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. ‘நகைச்சுவை என்ற பெயரில் சர்வசாதாரணமாய் உருவகேலி செய்யும் சந்தானமா இதைச் சொல்வது’ என வறுக்கிறார்கள் நெட்டிசன்கள். அனைத்தையும் பொறுமையாகக் கடந்துகொண்டிருக்கிறார் சூர்யா.
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டி - பிரியங்கா காந்தி
ஆமா... காங்கிரஸ் கோஷ்டிகளுக்கு இடையேயாவது கூட்டணி இருக்குமா?
- தமிழ்
நேரம் வரும்போது அண்ணாமலை முதலமைச்சராவார் - குஷ்பூ
ஏதாவது ஒரு யூனியன் பிரதேசத்தில் ஆளுநர் ஆகலாம்கிறதைத்தான் இப்படிச் சொல்றாரோ?
- பா.சக்திவேல்
பிசிசிஐ அமைப்புக்கு வரிவிலக்கு -செய்தி
நாங்க வேணும்னா எங்க பழைய துணியை, ப்ளேயர்ஸுக்கு போட்டுக்க கொடுத்து ஹெல்ப் பண்ணட்டுமா!
- மோகன்ராம்
சீனாவை எதிர்ப்பதற்காக, சிலர் தைவானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இது நெருப்போடு விளையாடுவதற்கு சமம் - சீன அதிபர் ஜி ஜின்பிங்
திருத்தம்... வைரஸோட விளையாடுறதுக்கு சமம்னு சொல்லுங்க?!
- இதயவன்
'அண்ணாத்த' கதையைக் கேட்டபோதே கண்கலங்கி விட்டேன்!- ரஜினி
கேட்டவங்களே கலங்கியிருந்தா படத்தைப் பார்த்தவங்க இன்னும் உயிரோட இருப்பாங்கன்னு நெனைக்கறே..?
- சரவணகவி
எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை - முதல்வர் ஸ்டாலின்
அதுக்கு விமோசனமே கிடையாதுன்னு தெரிஞ்சிடுச்சா தலைவரே?
-லட்சுமணன்