பிரபல மலையாள நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ்கோபியை குரங்குடன் ஒப்பிட்டு நெட்டிசன் ஒருவர் கலாய்த்திருந்தார். இதை நாய் என தவறுதலாகப் புரிந்து கொண்ட சுரேஷ்கோபியின் மகன், அதற்கு காட்டிய ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபிக்கு மிக அதிகளவில் ரசிகர்கள் உண்டு. தமிழில் இவர் அஜித்துடன் இவர் நடித்த தீனா திரைப்படமும் வெற்றிப் படம் தான். அதில் இவர், “தீனா கையைத்தான் வெட்டுவான். அவுங்க அண்ணன் ஆதிசேசன் தலையைவே வெட்டுவான்” என பேசும் வசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிப்பில் இருந்து இப்போது ஒதுங்கி அரசியலில் தீவிரம் காட்டிவருகிறார் சுரேஷ் கோபி. பாஜகவில் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கப்பட்ட சுரேஷ்கோபியின் பதவிக்காலம் அண்மையில் முடிந்தது.
இருந்தும் திருச்சூர் மாவட்டத்தில் பாஜகவை வளர்ப்பதாகச் சொல்லி அங்கேயே முகாமிட்டு சுற்றிவருகிறார் மனிதர். மலையாளத் திரையுலகில் பாஜகவின் குரலாக சுரேஷ் கோபி ஒலித்து வருகிறார். இப்படியான சூழலில் சுரேஷ்கோபியின் படத்தையும், அதன் பக்கத்திலேயே குரங்கு ஒன்றுக்கு கூலிங் கிளாஸ் போட்டு, பொட்டு வைத்து இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டு இணையவாசி ஒருவர் சுரேஷ் கோபியை சீண்டினார். அதை அவர் தவறுதலாக நாய் என புரிந்து கொண்ட சுரேஷ் கோபியின் மகனும் நடிகருமான கோகுல் சுரேஷ், அதற்கு உடனடியாக தனது ரியாக்ஷனையும் காட்டினார்.
‘இடது பக்கம் இருப்பது (குரங்கு) உனது தந்தை. வலது பக்கம் இருப்பது என் தந்தை (சுரேஷ் கோபி) என்பது தான் வம்பிழுத்த நெட்டிசனுக்கு கோகுல் கொடுத்த பதிலடி. இப்போது இதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர் பாஜக அனுதாபிகள்!