கன்னியாகுமரி மாவட்ட திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட எளியவர்களுக்கு நேசக்கரம் நீட்டிவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்கு இரண்டு நடக்க முடியாத சகோதரர்களை சேர்த்துவிட்டு அவர்களை அவ்வப்போது சந்தித்தும், மருத்துவர்களிடம் அவர்களின் உடல்நலனை விசாரித்தும் திரும்பிக் கொண்டிருக்கிறார் சுரேஷ்ராஜன். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த சகோதரர்கள் இவரது கண்காணிப்பில் உள்ளனர். இந்த இரு சகோதரர்களும் பொருளாதார பின்புலம் இல்லாதவர்கள். இவர்களின் சகோதரியோ மீன் வலைத் தயாரிப்புக் கூடம் ஒன்றில் வேலைசெய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் சகோதரர்களின் மருத்துவச் செலவையும் பார்த்து வந்தார். பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தன் சகோதரர்களையும் பராமரித்து வந்தார். இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்களின் மூலம் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்குத் தெரியவந்தது. உடனே அந்த சகோதரர்களை அவர்களது இல்லத்தில் போய் பார்த்தார்.
அவர்கள் இருவரும் தொடக்கத்தில் மற்றவர்களைப் போல் இயல்பாகவே இருந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவர்களால் சராசரி மனிதர்களைப் போல் நடக்க முடியவில்லை. அடுத்த சில வாரத்திலேயே குதிகாலால் மட்டுமே நடக்கும் சூழலுக்கு வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களின் உடல் இயக்கமே முற்றிலும் தடைபட்டு பிறர் துணையில்லாமல் வாழவே முடியாது என்னும் சூழலும் உருவானது.
மீன்வலை தயாரிப்பு கூடத்தில் வேலை செய்யும் சகோதரி இவர்களைப் பார்த்துக்கொள்ள சிரமப்படுவதைக் கேள்விப்பட்டு இருவரில் ஒரு சகோதரரை ஆயுர்வேத அரசு மருத்துவமனையிலும், மற்றொருவரை பராமரிப்பு இல்லத்திலும் சேர்த்துவிட்டார் சுரேஷ்ராஜன். ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுவனை தன் தொடர் பராமரிப்பிலும் நேரடியாகப் போய் விசாரித்து வருகிறார் சுரேஷ்ராஜன். மருத்துவர்களிடமும் அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து பேசி நேசக்கரம் நீட்டிவருகிறார்.
நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீ ஆனந்திற்கு 9 வயது ஆகிறது. ஆனால் வயதுக்குத் தகுந்த வளர்ச்சி இன்றி குழந்தையைப் போல் தான் இருக்கிறார் ஸ்ரீ ஆனந்த். அந்த சிறுவனுக்கோ முதுகுத் தண்டுவட பிரச்னை, கண்பார்வை குறைபாடு, கல்லீரல், மண்ணீரலில் குறைபாடு என பல்வேறு உடல் உபாதைகள்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஆனந்தின் சிகிச்சைக்கு, போதிய பணம் இன்றி அவரது பெற்றோர்கள் தவிப்பது குறித்துக் கேள்விப்பட்ட சுரேஷ்ராஜன் இன்று அவரது பெற்றோர்களை தன் இல்லத்துக்கு அழைத்து ஒன்றரை லட்சம் ரூபாய் சிறுவனின் உயர் சிகிச்சைக்காக வழங்கினார். கூடவே சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவன் ஸ்ரீ ஆனந்திற்கான சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகள் செய்துகேட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு பரிந்துரைக் கடிதமும் கொடுத்துள்ளார்.
ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் என்பதையெல்லாம் கடந்து எளிய மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் சுரேஷ்ராஜனின் மனிதநேய நடவடிக்கைகள் நாகர்கோவில்வாசிகள் மத்தியில் கவனம் குவிக்கிறது!