சின்னத்திரை

500 எபிசோட்களை கடந்துவிட்டது: முடிவுக்கு வருகிறதா `சித்தி2’ சீரியல்?

ஆதிரா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி2’ சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராதிகா சரத்குமார், சிவக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு சன் டிவியில் ‘சித்தி’ சீரியல் ஒளிபரப்பானது. சாரதா என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருப்பார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியலின் கதைக்களமும் ‘கண்ணின் மணி; கண்ணின் மணி’ என்ற பாடலும் ரசிகர்களிடையே மெகா ஹிட்டானது. பலருக்கும் நாஸ்டாலஜியாவான சீரியலும் கூட.

அப்படியான இந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜனவரியில் சன் டிவியில் ஒளிபரப்பானது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் ராதிகாவின் ராடன் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து இருந்தது. இதில் முதல் பாகத்தில் இருந்து ராதிகாவே கதாநாயகியாக நடித்திருக்க மற்றவர்கள் இப்போது உள்ள நடிகர்கள் நடித்திருந்தார்கள். கவின், வெண்பா கதாபாத்திரங்களில் ப்ரீத்தி மற்றும் நந்தன் ஆகியோர் நடித்து வந்தனர்.

அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து பாதியில் நடிகை ராதிகா வெளியேறினார். ராதிகா வெளியேறினாலும் சீரியலுக்கு ரசிகர்கள் தங்களது வழக்கமான ஆதரவை தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த சமயத்தில் ராதிகா தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு கவின் – வெண்பா கதாபாத்திரம் அவர்களது கெமிஸ்ட்ரிக்கே நிறைய ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இருக்கிறார்கள். தற்போது 500 எபிசோட்களை கடந்து சன் டிவியில் மதியம் ஒரு மணிக்கு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ‘சித்தி2’ சீரியல் சீக்கிரமே, அதாவது இன்னும் இரண்டு வாரங்களில் முடிய போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணம் இரண்டு புதிய சீரியல்கள் மதியம் சன் டிவி ஒளிபரப்ப இருக்கிறது. இதனால் ‘சித்தி2’வை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

மேலும், இந்த சீரியலில் யாழினி கதாபாத்திரத்திற்கும் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் அசார் கதாபாத்திரத்திற்கும் திருமணம் செய்து வைப்பதோடு ’சித்தி2’ சீரியல் முடிய இருப்பதாக சொல்கிறார்கள். ஏற்கெனவே, இந்த சீரியல் இடையில் நிறுத்தப்படுகிறது என பலமுறை தகவல்கள் வந்திருந்தாலும் இப்போது சீரியல் முடிவுக்கு வருவது உறுதி என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.

SCROLL FOR NEXT