மாநிலம்

அம்பேத்கரின் பாடப்பிரிவு என்ன ஆச்சு?: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஆர்.பாலசரவணகுமார்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் படிப்புகள் துறையைத் துவங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகமும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனித்துறையை அமைக்க 2006-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி குழுமம் புதிய துறையை துவங்க ஒப்புதல் அளித்ததாகவும், 2008-ம் ஆண்டு அம்பேத்கர் படிப்புகள் துறை அமைக்க பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன்பின் இந்த புதிய துறையை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழகம், பல புதிய துறைகளைத் துவங்கியுள்ளதாகவும், அம்பேத்கர் படிப்புகள் துறையை துவங்கக்கோரி மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். தனது விண்ணப்பங்களை பரிசீலித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் துறையை துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, பல்கலைக்கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT