மாநிலம்

நீட் விலக்கு மசோதாவை அனுப்பாவிட்டால்... ஆளுநருக்கு எதிராக முதல்வர் அடுத்த அஸ்திரம்

காமதேனு

"ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகிவிட்டன" என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வையும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட முன் வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பார் இன்றி கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக் கூடிய தேனீர் விருந்து என்ற விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாக அமைவதாலேயே அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எழவில்லை இந்த அரசுக்கு. இது குறித்து ஆளுநருக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அதில், அதற்கான விரிவான விவரங்கள் வரப்பட்டுள்ளன.

ஆளுநர் மீது எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஆளுநருக்கும், எனக்கும் மிகமிக சுமுகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும்போது இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டி அவர் பேசியிருக்கிறார். நாங்கள் ஆட்சி நடத்தக்கூடிய விதம் குறித்து பொது மேடையிலேயே ஆளுநர் பாராட்டி பேசியிருக்கிறார். அது ஊடகங்களில் எல்லாம் வெளியாகி வந்திருக்கிறது. ஆளுநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்கான மரியாதையை நாங்களும் அளிக்கிறோம், அளித்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறோம். இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு. இந்த பண்பாட்டை எந்த நிலையிலும் நாம் காக்க வேண்டும், காப்போம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டுகளைவிட தமிழ்நாட்டுக்கு நன்மையும், பலனுமே முக்கியமானது. அதனையே முக்கியமானதாக நான் கருதுகிறேன். இந்த சட்டப்பேரவையின் மாண்பை தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானதாக அல்ல. இந்த சபையின் மாண்புக்கு விரோதமானதாகும். ஆளுநர் அனுப்பி வைக்காதது என்பது எனக்கு அல்ல, இந்த தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிற செயலாகும்.

இந்த பேரவைக்கு சொல்லதெல்லாம், சொல்ல விரும்புவதெல்லாம், கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. இந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கை எனக்கு கற்று தந்ததெல்லாம் வலிகளையும், அவமானங்களையும், புகழ்ச்சிகளையும் பாராட்டுக்களையும் புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதுதான், செயல்படுவதுதான். அப்படித்தான் நான் செயல்பட்டு வருகிறேன். பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாகிய கடமை என்பதுதான் பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியிலே நான் கற்றுக் கொண்டுள்ள பாடமும். அந்த வழியில்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கக்கூடிய வலி, அவமானங்களை பொருத்துக் கொண்டு அதனால், தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்றால், புகழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் நான் புறந்தள்ளிவிட்டு, அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொள்ளவே எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே, தனிப்பட்ட நபருக்கான மரியாதையோ, புகழையோ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து நான் முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT