6 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே உடற்கல்வி பாடவேளை உண்டு என்றும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி பாடவேளை கிடையாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உடற்கல்வி பாடவேளை நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள முதன்னை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் அவ்வகுப்புகளை நடத்தலாம்.
நடப்பு கல்வியாண்டில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத் தேர்வுகள் நடைபெற இருப்பதால், அவ்வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த வேண்டும். தமிழக அரசு வழங்கி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உடற்பயிற்சி வழங்க வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.