மாநிலம்

அணிவகுப்பிற்கு அனுமதி கேட்ட ஆர்எஸ்எஸ்: காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

காமதேனு

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதிக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22ம் தேதி முடிவு எடுத்துத் தெரிவிக்கப்படும் எனக் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT