மாநிலம்

அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!

ஆர்.பாலசரவணகுமார்

குரூப் 1 முதல்நிலை தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கக் கோரிய மேல்முறையீடு வழக்குகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஜனவரி மாதம் குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டதில், 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு எனக் கூறி, இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், நிபுணர் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வர்களுக்கும் அதற்கான உரிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வேலுமணி உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என நிபுணர் குழு முடிவுக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் ஆய்வு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து, அனைத்து கேள்விகளையும் பதில்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு வழக்குகளில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபிக் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT