உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம் 
மாநிலம்

அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்... பக்தர்களுக்கு தடை!

கே.காமராஜ்

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கை அடுத்து, அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு திடீரென அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும், நேற்று மாலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, மேல்குருமலை உள்ளிட்ட மலைக் கிராம பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தொடர் மழை காரணமாக திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து உயர்ந்து வருகின்றது. இதனால் அருவியின் கீழ் பகுதியில் உள்ள கோயில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதே போல் அருவியில் நேற்று காலை முதல் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்த நிலையில், மாலையில் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் அருவி மற்றும் கோயில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT