அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்  
மாநிலம்

`ஆளுநரின் கருத்து அரசியல் சட்டத்துக்கு எதிரானது'

காமதேனு

"நீட் விலக்கு மசோதா பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது. நீதிபதி ஏ.கே.ராஜனின் குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது" என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அதே தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்து பேசுகையில், "நீட் தேர்வை அறிமுக காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. 142 நாட்களுக்கு பிறகு சில காரணங்களை சுட்டிக் காட்டி சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பி உள்ளார். அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர், குடியரசு தலைவருக்குதான் மசோதாவை அனுப்பி இருக்க வேண்டும்.

சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியல்ல. குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல. பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து உரிய ஆய்வுக்கு பிறகே நீர் விலக்கு கோரலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்தது. ஆளுநரின் கருத்த உயர்மட்டக்குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது. நீட் விலக்கு மசோதா பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது. பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவ படிப்பு என்பதே எட்டாக்கனியாக மாறியுள்ளது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வை எழுதுகிறார்கள். பழங்குடியின மக்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல், நீதிபதி குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உரிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் குறைகூடுவது சரியல்ல. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கதல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு சட்டமன்றம் சட்டமே இயற்றக்கூடாது என்று கூறுவது ஏற்புடையதல்ல" என்று கூறினார்.

SCROLL FOR NEXT