"வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை" என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. 111 பேரில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தொடர்ந்து 109 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பதற்றம் அடைய தேவையில்லை.
தமிழகத்தில் 1000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 1.48 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை. தொற்று பரவல் விஷயத்தில் அச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை. அக்கறைப்பட வேண்டிய நேரத்தில் உள்ளோம். கரோனா பரவல் இல்லாவிட்டாலும் மக்கள் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது" என்று கேட்டுக் கொண்டார்.