மாநிலம்

டாஸ்மாக் பார்களை மூட வேண்டாம்; தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

காமதேனு

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், பார்கள் நடத்துவதற்கான டெண்டர்களை வெளியிடலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளில் இணைப்பில் இருக்கக் கூடிய பார்கள், தின்பண்டம் விற்பனை மற்றும் காலிப்பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டதால் புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் என்றும் நில தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சில ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்த வழக்கில் வழக்கிற்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கு தொடர்ந்த மனுதாரர் யாரும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல டாஸ்மாக் நிறுவனத்துக்கு பார்களை நடத்துவதற்கான உரிமை உள்ளது என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு, டாஸ்மாக் நிர்வாகம், பார்கள் நடத்துவதற்கான டெண்டர்களை வெளியிடலாம் என்று உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT