ஆந்திர மாணவரை சந்தித்து பேசும் முதல்வர் ஸ்டாலின்
ஆந்திர மாணவரை சந்தித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் 
மாநிலம்

`சிம் சார் ஹெல்ப் மீ'- முதல்வரை நெகிழவைத்த `நீட்'டுக்கு எதிரான ஆந்திர மாணவர்

காமதேனு

`CM SIR HELP ME' என்ற பதாகையுடன் சென்னை டி.டி.கே.சாலையில் நின்று கொண்டிருந்த ஆந்திர மாணவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். "நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுங்கள்" என்று முதல்வர், அந்த மாணவரை கேட்டுக் கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

இந்தியா போன்ற ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், சாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை நிலவும் நாட்டில், நீட் போன்ற பொது நுழைவுத்தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு தடையாக விளங்குகிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அது தொடர்பாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்றதோடு, உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது.

அப்படிப் பெற்ற கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தியப் பிரதமரை 17-6-2021 அன்று முதல்வர் நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அச்சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காத்திட தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசும் ஆந்திர மாணவர் சதீஷ்

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகம் வரும் வழியில், டி.டி.கே.சாலையில், முதல்வர் ஸ்டாலினை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் என்.சதீஷ், `CM SIR HELP ME' என்ற பதாகையுடன் சந்தித்து, முதல்வர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவையும் தெரிவித்தார். மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் பேராதரவு ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதல்வர், அந்த மாணவனிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, அம்மாணவனுக்கு நன்றி தெரிவித்து, அகில இந்திய அளவிலும் இதற்காக குரலை தான் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அந்த மாணவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார். இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT