பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட காவலர்
பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட காவலர் 
மாநிலம்

தவறு செய்த தனது பாதுகாப்பு படை காவலர்: அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின்

காமதேனு

முதல்வரின் வருகையின்போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரை தாக்கிய முதல்வரின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர் உடனடியாக அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக இரண்டு நாள் பயணமாக வந்திருக்கிறார். நேற்று முதல் நாள் ஆய்வை முடித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று இரண்டாம் நாளாக மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தபோது அங்கு செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஆரிஷ் என்பவரை முதல்வரின் பாதுகாப்புப்படையை சேர்ந்த காவலர் ஒருவர் நெஞ்சில் கை வைத்து தள்ளி அப்புறப்படுத்தினார்.

அவர் பத்திரிகையாளர் என்று கூறியும், அடையாள அட்டையை காட்டியும் கூட முரட்டுத்தனமாக செயல்பட்ட அந்த காவலர் ஆரிஷை நெஞ்சில் கைவைத்து தள்ளினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பத்திரிகையாளர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

அதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர், உடனடியாக அந்த காவலரை வேறு பணிக்கு மாற்ற உத்தரவிட்டார். அதனையேற்று காவல் துறை அதிகாரிகள் அவரை முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கம் செய்து வேறு பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT