மாநிலம்

`அந்நிய மரங்களை அகற்ற ஊரக வேலை திட்ட நிதியை பயன்படுத்தலாமா?'

ஆர்.பாலசரவணகுமார்

மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், வேலையே செய்யாமல் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என வேதனை தெரிவித்ததுடன், மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் எனவும், வேலை உறுதி திட்டத்தின் நிதியை பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் மலை வாழ் மக்கள் மூலம் அந்நிய மரங்களை அகற்ற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT