அண்ணா பல்கலைக்கழகம் 
மாநிலம்

100% கட்டணம் உயர்த்தியிருக்க வேண்டும்; 50% தான் செய்தோம்... துணைவேந்தர் வேல்ராஜ்!

காமதேனு

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

துணை வேந்தர் வேல்ராஜ்

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘’அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 50% உயர்த்தியதால் அது அதிகம் என மாணவர்கள் முறையிட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வு என்பது 9 வருடங்களுக்கு பிறகு வந்துள்ளது. 2014ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேர்வு கட்டணம் தான் இதுவரை இருந்து வருகிறது.

செலவுகள் அதிகமாக இருப்பதால், அதாவது தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு வரக்கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. ஏனெனில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை. அதனை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அறிவித்தோம். நாட்டின் வளர்ச்சியை பார்க்கும் போது 100 சதவீதம் கட்டணத்தை உயர்த்திருக்க வேண்டும். ஆனால் 50 சதவீதம் தான் உயர்த்தியுள்ளோம். நாங்கள் சரியாகத்தான் செய்துள்ளோம்.

இதனை ஏற்றுக்கொண்டு பல கல்லூரிகள் கட்டணத்தை வசூல் செய்துள்ளனர். உயர்கல்வித்துறையின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு என்பது நிறுத்தி வைக்கப்படுகிறது. வசூலித்த கட்டணங்களை மாணவர்களிடமே திருப்பி அளிக்குமாறு கல்லூரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT