விளையாட்டு

நாட்டுக்காக சாதனை படைத்த தமிழக இளம் வீரர் விஸ்வாவுக்கு நடந்த சோகம்

காமதேனு

மேகாலயாவில் நடந்த விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் இளம் வீரர் விஷ்வா தீனதயாளன் உயிரிழந்தார். அவருக்கு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான விஷ்வா தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர். ரி-போய் என்ற மாவட்டத்தில் சாலை வளைவில் திரும்பும்போது எதிரே வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தமிழக வீரர்களில் 18 வயதே ஆன விஸ்வா தீனதயாளன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்தில் நொறுங்கிய கார்

தமிழக டேபிள் டென்னிஸ் அணியின் ரமேஷ் சந்தோஷ்குமார், அபினேஷ், கிஷோர்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஸ்வா தீனதயாளனின் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது. ஜூனியர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விஸ்வா தீனதயாளன், அடுத்த வாரம் ஆஸ்திரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க இருந்தார்.

அவரது மரணத்திற்கு மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகச்சிறந்த வீரரை நாடு இழந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நமது நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு அதிர்ச்சி அடைந்தேன். இளம் சாதனையாளராக உருவாகி கொண்டிருந்த அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT