ஷகிப் அல் ஹசன் 
விளையாட்டு

ஷகிப் அல் ஹசன் இலங்கை வந்தால் கல்லால் அடித்து துரத்துவோம்- மேத்யூஸின் சகோதரர் ஆவேசம்!

காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடந்துக் கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் இலங்கை வந்தால் கல்லால் அடித்து துரத்துவோம் என்றும் இலங்கை அணி வீரர் மேத்யூஸின் சகோதரர் ஆவேசமாக பேசியுள்ளார்.

வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஏஞ்சலோ மேத்யூஸ் களத்துக்கு தாமதமாக வந்தார். அதன் பின்னும் அவர் ஹெல்மெட் சரியில்லை என மேலும் தாமதம் செய்ததால் விதிப்படி புதிய பேட்ஸ்மேன் பேட்டிங் செய்ய நேரம் கடத்தியதற்காக டைம் அவுட் கோரினார் ஷகிப் அல் ஹசன். அம்பயர் அவுட் கொடுத்தார்.

பொதுவாக விதிப்படி இது அவுட் என்றாலும் எதிரணிகள் இது போன்ற நியாயமான காரணங்களால் தாமதம் ஆனால் அவுட் கேட்க மாட்டார்கள். ஆனால், ஷகிப் அல் ஹசன் அவுட் கேட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. சிலர் மேத்யூஸ் செய்தது தவறு எனக் கூறினாலும், சிலர் ஷகிப் அல் ஹசன் அவுட் கேட்டு இருக்கக் கூடாது என அவரை விமர்சனம் செய்தனர்.

வங்கதேசம் - இலங்கை

இந்த சம்பவம் நடந்த பின் இலங்கை - வங்கதேச வீரர்கள் இடையே வார்த்தை மோதல்கள் நடந்தன. போட்டிக்கு பின் இலங்கை வீரர்கள் கை குலுக்க வரவில்லை. இந்த நிலையில், அதற்கு மறுநாள் ஷகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில், ’’உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச கேப்டன் நடந்துக் கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் இலங்கை வந்தால் கல்லால் அடித்து துரத்துவோம்’’ என மேத்யூஸின் சகோதரர் ஆவேசமாக பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT