விளையாட்டு

ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் அணிக்கு ஆட்டம் காட்டிய அரியலூர் வீரர்

காமதேனு

ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. அரியலூர் வீரர் அடித்த கோல் பாகிஸ்தான் அணியை அதிரவைத்துவிட்டது.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் கார்த்தி, மாரீஸ்வரன் என இரண்டு தமிழக இளைஞர்களும் இடம்பிடித்திருந்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பிடித்ததே பெருமைமிக்க விஷயமாக பார்க்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பீரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தொடக்க லெவனிலேயே கார்த்திக்கு இடம் கிடைத்திருந்தது.

முதல் கால்பகுதியிலேயே கார்த்தி கோல் அடித்துவிட்டார். ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்திலேயே ஒரு பெனால்டி வாய்ப்பில் ட்ராக் ஃப்ளிக் செய்து கோல் ஆக்கினார். இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் 8 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்திருந்தன. அவற்றில் கார்த்தி மட்டுமே கோல் அடித்திருந்தார். கார்த்தி அடித்த கோல் இந்தியாவிற்கு போட்டியையே வென்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கடைசி ஒரு நிமிடம் இருக்கும்போது பாகிஸ்தான் ஒரு கோலை அடித்து போட்டியை டிரா செய்துவிட்டது.

முடிவுகளை தாண்டி தமிழ்நாட்டு வீரர் ஒருவர் நன்றாக ஆடி கோல் அடித்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயம்தான். அரியலூரிலிருந்து புறப்பட்டு இந்தோனேஷியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமாகி முதல் கோலை அடிப்பது சாதாரண விஷயமல்ல. இந்திய அணிக்காக அவரின் முதல் போட்டியே இதுதான். முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கோலை அடித்து மறக்க முடியாத அறிமுகத்தை பதிவு செய்திருக்கிறார். தமிழக வீரர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார்கள் என்பதே பெரும் ஊக்கத்தை கொடுத்தது. ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி அடுத்தடுத்து மோதவிருக்கிறது.

SCROLL FOR NEXT