பஞ்சகவ்ய தீபம்
பஞ்சகவ்ய தீபம் 
தரிசனம்

பஞ்சகவ்ய தீப மகத்துவம் : ஐஸ்வர்ய கடாட்சம் தருவாள் ஸ்ரீமகாலட்சுமி!

காமதேனு

விளக்கேற்றுவதே மங்கலங்களை நம் இல்லத்தில் நிறைக்கச் செய்யும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக, பஞ்சகவ்ய தீபமேற்றி வழிபடுவது சகல வளங்களையும் தரும். இதுவரை இழந்தவற்றையெல்லாம் தந்தருளும் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

பொதுவாகவே, வீடுகளில் குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை, ஹோமங்கள் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம். வீட்டில் செய்யப்படும் ஹோமமும் ஹோமத்தில் இருந்து உண்டாகி, வீடு முழுக்க நிறைந்திருக்கும் புகையும் நமக்கும் நம் இல்லத்துக்கும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

12 வருடத்துக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்யச் சொல்லி ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. அதேபோல், நம் வீட்டில், ஆறு மாதத்துக்கு ஒருமுறையோ வருடத்துக்கு ஒரு முறையோ ஹோமங்கள் செய்வது நற்பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம்.

தீபம் ஏற்றுவதில், பஞ்சகவ்ய தீபம் ஏற்றுவது என்பது ஹோமத்துக்குச் சமமானது. மகா கணபதி ஹோமம் செய்வோம். நவக்கிரக ஹோமம் செய்வோம். சத்ரு சம்ஹார ஹோமத்தைச் செய்வோம். இந்த மூன்று ஹோமங்கள் என்னென்ன பலன்களைத் தருமோ, அதை பஞ்சகவ்ய தீப வழிபாடு தரும் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

நம் இல்லத்தில், பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானது. பஞ்சகவ்ய விளக்கிலிருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவச் செய்யவேண்டும். இதனால் நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகும். நேர்மறையாக சிந்தித்துச் செயல்படத் தொடங்குவோம். கடன், தரித்திரம், மங்கல காரியங்களில் உள்ள தடை, கணவன் மனைவி இடையே ஒற்றுமை இல்லாத நிலை முதலானவற்றைப் போக்கியருளக்கூடியது, பஞ்சகவ்ய தீப வழிபாடு!

பசுவின் பால், நெய், கோமியம், தயிர் மற்றும் பசுஞ்சாணம் ஆகிய ஐந்து பொருட்களுடன் மூலிகைகளும் சேர்க்க நமக்குக் கிடைப்பதே பஞ்சகவ்ய தீபம். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்கிறது புராணம். அதுவும் பால், நெய், தயிர் போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்!

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழை இலை அல்லது வெற்றிலை என இவற்றில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைத்துக்கொள்ளவேண்டும். நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபமேற்றலாம். சாதாரணமாகவே நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றுவது செல்வத்தைப் பெருக்கும் என்கிற தீப தாத்பரியங்கள் விவரிக்கின்றன.

பஞ்சகவ்ய விளக்கில் விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் விபூதிக்கு இணையானது. இந்த விபூதியை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு வந்தாலே, நம் வாழ்வில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்!

பஞ்சகவ்ய விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி முதலான நாட்களில் ஏற்றலாம். அதேபோல், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிளும் ஏற்றி வணங்கலாம்.

ஒரு முறை பஞ்சகவ்ய தீபமேற்றி வழிபடுவது, கோ பூஜை செய்ததற்கும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்குமான பலன்களைத் தரும்! வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது இன்னும் மகத்துவங்களைத் தரும் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்!

பஞ்சகவ்ய தீபங்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிவைத்துக் கொண்டு, ஏழு செவ்வாய்க்கிழமை அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகள் என கணக்குவைத்துக் கொண்டு, 11 முறை பஞ்சகவ்ய விளக்கேற்றி, ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்தால், குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். கண் திருஷ்டி முதலானவை கழியும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். நம் வீட்டில் மகாலட்சுமி எப்போதும் குடியிருந்து நம்மைக் காத்தருளுவாள்!

SCROLL FOR NEXT