பர்வதவர்த்தினி
பர்வதவர்த்தினி 
தரிசனம்

அருள்தரும் சக்தி பீடங்கள் - 40

கே.சுந்தரராமன்

அம்மனின் சக்தி பீட வரிசையில், ராமேஸ்வரம் பர்வதவர்ததினி சமேத ராமநாதர் கோயில் சேது சக்தி பீடமாக போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 8-வது தலமாகும்.

இந்திய நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. 1,212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் 3-ம் பிரகாரம் உலகப் புகழ் பெற்றது.

தல வரலாறு

இலங்கையை ஆண்ட ராவணன் சிறந்த சிவபக்தராக விளங்கினார். ராமபிரான் – ராவண யுத்தத்தில் ராவணனை அழித்ததால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இந்த தோஷம் நீங்க, ராமபிரான், ராமேஸ்வரம் கடற்கரையில் சிவபூஜை செய்ய எண்ணி, அதற்காக சிவலிங்கத்தை கொண்டுவர ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயர் குறித்த நேரத்தில் சிவலிங்கத்துடன் வராததால், சீதாபிராட்டி கடற்கரை மணலால் சிவலிங்கம் அமைத்தார். அந்த லிங்கத்துக்கு ராமபிரான், ஆராதனைகள் செய்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்ட லிங்கம் என்பதால், ராமநாதசுவாமி என்று இத்தல சிவபெருமானுக்கு பெயர் ஏற்பட்டது. இங்கே சிவபெருமான் சந்நிதியில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

யாத்திரை முறை

காசி, ராமேஸ்வரம் யாத்திரையின்போது, பக்தர்கள் முதலில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தத்துடன் காசிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். கங்கை தீர்த்தத்தில் ராமேஸ்வரம் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்துவந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை முடிக்கவேண்டும்.

மகாளய தர்ப்பணம்

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்ச சமயத்தில் நமது முன்னோர் அனைவரும் சேர்ந்து (மகாளயம் – ஒன்றாக சேர்ந்து) பித்ருக்களாக பூமிக்கு வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் எமதர்மராஜர், நமது முன்னோர் அனைவரையும் அவரவர் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதி அளிப்பதாக நம்பிக்கை அந்த சமயத்தில் நாமும் அவர்களை வரவேற்று, அவர்களுக்காக தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் (திதி கொடுப்பது) முதலான காரியங்களை செய்தால், அவரவர் குடும்பம், முன்னோரின் ஆசியால் முன்னேற்றம்பெறும் என்பதும் நம்பிக்கை. அதுமாதிரியான பிதுர் காரியங்களை செய்வதற்கு உகந்த இடமாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது.

ஜோதிர்லிங்க தரிசனம்

சிவபெருமான் ஜோதி ரூபமாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு ராமபிரான் சிவபெருமானை வழிபட்டுள்ளார். தனது சகோதரர் ராவணனை அழிப்பதற்காக, ராமபிரானுக்கு உதவி புரிந்தார் விபீஷணன். அவரும் தனது பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபெருமானை வழிபட்டார். விபீஷணனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சியளித்து, ஜோதி ரூபமாக மாறி, லிங்கத்துடன் ஐக்கியமானார். இதுவே ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த லிங்கம், ராமநாதசுவாமி சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

ராமநாதசுவாமி கருவறையில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் உள்ளது. தினமும் காலை இந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யப்படும். சுவாமி கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவர் அருள்பாலிக்கிறார். அவர் எதிரில் உள்ள பலிபீடம் தொடங்கி, வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயண நூலை சுமந்துகொண்டு ராமநாத சுவாமி சந்நிதியை வலம் வந்து வழிபடுகின்றனர்.

பர்வதவர்த்தினி

பர்வதவர்த்தினி அம்பாள் பீடத்துக்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது. சித்திரை வருடப் பிறப்பு தினத்தில் மட்டும் அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். ‘மலைவளர் காதலி’ என்று திருஞானசம்பந்தர், அம்பிகையைப் போற்றியுள்ளார். ஆடி மாதத்தில் அம்மன் உற்சவம் சமயத்தில் ஆடித் தபசு விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் விபீஷணன் அமைத்த ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்ட பெருமாள் அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதியில் அஷ்டலட்சுமியும் சண்டிகேஸ்வரியும் உள்ளனர். அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் சந்தான விநாயகரும் சௌபாக்கிய விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச்செழிப்பு பெறவும், பக்தர்கள் இவர்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

கோயில் அமைப்பு

ராமநாதசுவாமி கோயில் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கோயில், உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள கோயிலாக விளங்குகிறது. கி.பி 17-ம் நூற்றாண்டின் இறுதியில் சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப்பிள்ளையால் கிழக்கு கோபுரம் கட்டப்பட்டது. இங்குள்ள பிரகாரங்களின் மொத்த நீளம் 3,850 அடியாகும். வெளிப் பிரகாரத்தில் 1,200 தூண்கள் அமைந்துள்ளன.

முதல் பிரகாரத்தில் சீதாபிராட்டி அமைத்த மணல் லிங்கத்துக்கு ராமபிரான் பூஜை செய்யும் சந்நிதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்ந்து அமைக்கப்பட்ட பந்தலில் நடராஜப் பெருமான் அருள்பாலிக்கிறார். நாகவடிவில் பதஞ்சலி முனிவர் அருள்பாலிக்கிறார். யோகக் கலையில் தேர்ச்சிபெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் பதஞ்சலி முனிவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இரண்டு லிங்கங்களுக்கும் மத்தியில் சரஸ்வதி தேவி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ரலிங்க சந்நிதிகள் அமைந்துள்ளன.

விஸ்வநாதர், உப்பு லிங்கம் சந்நிதிகள்...

ராமபிரான் சிவபூஜை செய்ய எண்ணியதால், சிவலிங்கத்துக்கு ஏற்பாடு செய்ய ஆஞ்சநேயரிடம் கூறினார். ஆஞ்சநேயரும் காசிக்குச் சென்று விஸ்வநாதர் விக்கிரகத்தை கொண்டு வரப் பயணித்தார். ஆனால், சற்று தாமதமாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார், அதற்குள் சீதாபிராட்டி மணலால் சிவலிங்கம் செய்து முடித்திருந்தார். ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கத்துக்கு ‘விஸ்வநாதர்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

தன் பக்தன் தனக்காக மிகவும் சிரமப்பட்டு கொண்டு வந்த சிவலிங்கத்துக்கு முதலில் பூஜை செய்தார் ராமபிரான். அதற்குப் பின்னர் சீதாபிராட்டி செய்த மணல் லிங்கத்துக்கு ஆராதனைகள் செய்தார். இன்றும் விஸ்வநாதருக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னரே, ராமநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ராமநாதசுவாமி சந்நிதிக்கு இடப்புறத்தில் விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம், கோயில் நுழைவு வாயிலில் வலப்பக்கம் உள்ளது.

சீதாபிராட்டி செய்த லிங்கம் மணலால் செய்யப்படவில்லை என்ற விவாதம், ஒருசமயம் பக்தர்கள் மத்தியில் எழுந்தது. பாஸ்கர ராயர் என்ற அம்பாள் பக்தர், உப்பைக் கொண்டு லிங்கம் செய்து அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். அந்த லிங்கம் கரையாமல் இருந்தது. தான் செய்த உப்பு லிங்கமே கரையாதபோது, சீதாபிராட்டி செய்த மணல் லிங்கம் கரையாததில் ஆச்சரியம் இல்லை என்று பக்தர்களுக்கு பாஸ்கர ராயர் தெளிவுபடுத்தினார். ராமநாதர் சந்நிதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. உப்பின் சொரசொரப்புடன் இந்த லிங்கம் இருப்பதை இப்போதும் காணலாம்.

22 தீர்த்தங்கள்

தனுஷ்கோடியில் நீராடிய பின்பு, இத்தலத்தில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும். ஒவ்வொரு தீர்த்தத்திலும் நீராடினால் ஒவ்வொரு பலன் உண்டு என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தீர்த்தம் (செல்வ வளம்), சாவித்திரி தீர்த்தம் (பேச்சுத் திறன்), காயத்ரி தீர்த்தம் (உலக நன்மை), சரஸ்வதி தீர்த்தம் (கல்வியில் மேன்மை), சங்கு தீர்த்தம் (வாழ்க்கை வசதி அதிகரிப்பு), சக்கர தீர்த்தம் (மன உறுதி பெறுதல்), சேது மாதவ தீர்த்தம் (அனைத்து விதமான தடைகளும் நீங்கப் பெறுதல்), நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம் (இஷ்ட சித்தி நிறைவேற்றம்), பிரம்மஹத்தி தோஷ விமோசன தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம் (அனைத்துத் துறையிலும் வல்லுநர் ஆகுதல்), சர்வ தீர்த்தம் (எப்பிறவியிலும் செய்த பாவம் நீங்குதல்), சிவ தீர்த்தம் (சகல பீடைகளும் ஒழிதல்), சத்யாமிர்த தீர்த்தம் (ஆயுள் விருத்தி), சந்திர தீர்த்தம் (கலையார்வம் பெருகுதல்), சூரிய தீர்த்தம் (முதன்மை இடம் பெறுதல்), கோடி தீர்த்தம் (முக்தி – மறுபிறவி இல்லாத நிலை). இக்கோயிலுக்கு வெளியேயும் தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் முதலான இடங்களில் 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

ராமாயண திருவிழா

ராமநாதர் கோயிலில் ராமபிரான், லட்சுமணர், சீதாபிராட்டி ஆகியோர் உற்சவமூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, ஆடி அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி தினங்களில் ராமபிரான் புறப்பாடாவார். ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ராவணனனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராவண வதம், விபீஷண பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை வைபவங்கள் இங்கே விமர்சையாக நடைபெறும்.

சேது பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத் தமிழ்

சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாச்சல கவிராயர் எழுதிய சேது பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத் தமிழில், அம்பாள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்று பத்து வித பருவங்களில் வர்ணித்துப் போற்றப்படுகிறார். பலபட்டடை சொக்கநாத கவிராயர் இத்தலத்தின் மேல் ‘தேவை உலா’ பாடியுள்ளார். நிரம்பவழகிய தேசிகர் இத்தலத்தின் வரலாறை ‘சேது புராணம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தின் மீது தேவாரப் பாடல்கள் புனைந்து சிவபெருமானையும், அம்பிகையையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, மாசி பிரம்மோற்சவம், ஆடித் தபசு தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுவதால், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து, நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு செய்வது வழக்கம். மாசி மகா சிவராத்திரி விழாவில் சிறப்புப் தேரோட்டம் நடைபெறும்.

SCROLL FOR NEXT