மண்டலம்

ஸ்டிரைக்கில் பங்கேற்கும் போக்குவரத்து ஊழியர்களை அச்சுறுத்துவதா?

கவிதா குமார்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், சங்கங்கள் ஆதரவளித்துள்ளன. இப்போராட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மதுரை போக்குவரத்து கழகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், " போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினாரிடம் கேட்டோம்.

கே.ஆறுமுக நயினார்

"தொழிலாளர்களை அச்சமூட்டுவதற்கான அறிவிப்பை போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். பொதுத்துறையைக் காக்க நடைபெறும் இப்போராட்டத்தில் திமுக போக்குவரத்து தொழிற்சங்கமும் பங்கேற்கிறது. எல்ஐசி, வங்கி, ரயில்வே துறைகளைத் தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிராக ஊழியர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், போக்குவரத்துத்துறையில் மட்டும் அதிகாரிகள் ஏன் பங்கேற்க மறுக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT