குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குமரிமாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
கேரளத்தில் பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக அதை ஒட்டியிருக்கும் குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்ட விவசாயத்தின் ஜீவாதாரமான பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பிவருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மறுகால் திறண்டு விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா காலம் என்பதால் வீட்டிலேயே முடங்கி இருந்ததாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வருகின்றனர். சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு வருபவர்கள் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் உற்சாகக் குளியல் போடுகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தாலும் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போதிய பார்க்கிங் வசதி செய்யப்படாததால் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை நிறுத்த முடியாமல் தவித்தனர். இதேபோல் புறக்காவல் நிலையத்திலும் காவலர்களை பணியமர்த்தி சீசன் நேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.