தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தருடன் சேகர்பாபு
தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தருடன் சேகர்பாபு 
மண்டலம்

`இது தீட்சிதர்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல'- அமைச்சர் சேகர்பாபு

காமதேனு

``பொது கோயில்களில் பிரச்சினைகள், முறைகேடுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு'' என்று அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு இன்று காலை வந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அங்கு தரிசனம் செய்தபின்னர் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார்.

அங்கு ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை திறந்து வைத்த அமைச்சர், ஆதீனத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி வைத்தார். ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விருந்தினர் மாளிகை திறப்பு நிகழ்வு

இதையடுத்து ஆதீனகர்த்தர் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது.

திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்சினைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும்.

ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்கு வழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான். மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. இது தீட்சிதர்கள் மற்றும் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் கோயில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT