திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைக் கட்டிட 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சந்தனமாரி (35), அர்ஜுன் (15) மற்றும் அர்ச்சனா (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அர்ச்சனா திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று மதியம் 2.30 மணியளவில் வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியேறிய அர்ச்சனா பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் செல்ல அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தின் கைப்பிடி மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அர்ச்சனாவை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி அர்ச்சனா உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.