மண்டலம்

அரசியல் மட்டுமின்றி படிப்பிலும் சாதித்துவிட்டார்: யார் இந்த விசாலாட்சி?

ஆர்.டி.சிவசங்கர்

உதகை அரசு கலைக்கல்லூரி விலங்கியல்த்துறை மாணவி விசாலாட்சி விஜயகுமார் பிஹெச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற தேர்ச்சி பெற்றார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் 2017-ம் ஆண்டு விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக விசாலாட்சி விஜயகுமார் சேர்ந்தார். இவர் குறுகிய காலத்தில் பிஹெச்டி பட்டம் பெற தனது ஆய்வை சமர்ப்பித்தார். அவரது ஆய்வு ஏற்றுகொள்ளப்பட்டு, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விலங்கியத்துறை உதவி பேராசிரியர் தே.ஜெயபாலன் கூறும்போது, "பிஹெச்டி பட்டம் 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்குள் பெறலாம். விசாலாட்சி விஜயகுமார் தனது கடின உழைப்பால் மிக குறுகிய காலத்தில் அதாவது 2 ஆண்டுகளில் தனது ஆய்வை முடித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். கரோனா காலத்தால் தற்போது அவரது ஆய்வறிக்கை தணிக்கை செய்யப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை வெளிநாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தணிக்கை செய்த பின்னர், ஜூவாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா (Zoological Survey of India) நிறுவனத்தின் இணை இயக்குநர் வெங்கடேசன் தணிக்கை செய்து ஒப்புதல் வழங்கினார்.

அதன் பேரில் இன்று பல்கலைக்கழக பார்வையாளரும், அரசு கலைக்கல்லூரி முதல்வருமான எம்.ஈஸ்வரமூர்த்தி, வனவிலங்கியல் துறை தலைவர் மோகனகிருஷ்ணன், விலங்கியல் துறை தலைவர் எபினேசர், உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், மாணவர்கள் என 100 பேர் முன்னிலையில் பொது வாய்மொழி தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வில் விசாலாட்சி விஜயகுமார் தேர்ச்சி பெற்றார். அவர் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இவருக்கு பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT