மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வைகை அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இவ்விழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இவ்விழா ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து இன்று முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை, 216 மில்லியன் கனஅடி தண்ணீரைத் திறக்க தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணியளவில் வைகை அணை திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுவதால், கள்ளழகரைக் காண வரும் பக்த கோடிகளின் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.