கொட்டும் மழையில் இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊழியர்கள்
கொட்டும் மழையில் இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊழியர்கள் 
மண்டலம்

வேலை வேண்டி கொட்டும் மழையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்திய பெண் ஊழியர்கள்!

காமதேனு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு கொட்டும் மழையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட, பணிநீக்கம் செய்யப்பட்ட, ஒப்பந்த ஊழியர்கள் 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 136 பணியாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த மாதம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி திடீரென பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறை மூலம் அவர்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றியது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 80 பேர் காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் மழை பெய்த போதும் மழையில் நனைந்தவாரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் துணைவேந்தர் உள்பட அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால், இரவு வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் பல்கலைக்கழகத்துக்குள் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 25 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் இரவில் கைது செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT