தற்போது துணை குடியரசுத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் பாஜக சார்பில் யாரை களம் இறக்குவது என்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மத்திய அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி அண்மையில் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருவர் வெற்றிபெற 391 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக நாளை அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ள நிலையில் பாஜக இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. வரும் ஜூலை 19-ம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனுவுக்கான கடைசி நாள் ஆகும்.