அரசியல்

‘இதனால்தான் எனக்கு பதவி கொடுத்தார்கள்’ - தொகுதி மக்களிடம் மனம் திறந்த ஆ.ராசா

காமதேனு

திமுக துணை பொதுச் செயலாளராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு நீலகிரியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் எனப் பல்வேறு பதவிகளுக்கு பழைய நிர்வாகிகளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் ஒருவர். நீலகிரி தொகுதி எம்பியாக இருக்கும் இவர், துணைப் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தொகுதிக்கு வந்தார். அவருக்கு அன்னூர் திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, "திமுக துணை பொதுச் செயலாளராக மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்ததற்காகத் தமிழ் இனத் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பெரிய பொறுப்பை எனக்கு வழங்குவதற்குக் காரணமாக உள்ள தொகுதி மக்கள் ஒவ்வொருவரின் பாதம் தொட்டு வணங்கக் கடமைப்பட்டுள்ளேன்.  நீங்கள் நீலகிரி தொகுதி எம்பியாக ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் எனக்கு இந்தப் பதவியைக் கட்சித் தலைமை கொடுத்திருக்காது. இதற்காகவே உங்களை வணங்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.. உங்களுடைய பெயர்களெல்லாம் என் இதயத்தில் அப்படியே உள்ளது. என்றென்றும் உங்களுக்கு நன்றியாக இருப்பேன்” எனக் கூறினார்.

SCROLL FOR NEXT