அரசியல்

வெளிநாட்டு நிதி உதவி சட்டத்தை மீறியதாக புகார்: ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து

காமதேனு

வெளிநாட்டு நிதி உதவி சட்டத்தை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

1991-ம் ஆண்டு நிறுவப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இதன் உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார். ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது

இதில், வெளிநாட்டு நிதியுதவி சட்டத்தை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (ஆர்ஜிஎஃப்) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் பல்வேறு சட்ட விதிகளை மீறுவது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்கும் அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அறக்கட்டளையின் தலைவரான சோனியா காந்தி அதிர்ச்சியடைந்துள்ளார்.

SCROLL FOR NEXT