வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு 'சில தலைவர்களின் அநாகரீகமான நடத்தையை நாடு கவனிக்கிறது...' - யாரைச் சொல்கிறார் வெங்கையா நாயுடு?
அரசியல்

'சில தலைவர்களின் அநாகரீகமான நடத்தையை நாடு கவனிக்கிறது...' - யாரைச் சொல்கிறார் வெங்கையா நாயுடு?

காமதேனு

சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் சில தலைவர்களின் அநாகரீகமான நடத்தையை நாடு கவனித்து வருவதாகவும், ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் ராஜம் ஜிஎம்ஆர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடம் வெங்கையா நாயுடு, " சில தலைவர்கள் சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் அநாகரீகமாக நடந்து கொள்வதை மொத்த நாடும் கவனித்து வருகிறது. அநாகரீகமான தலைவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது. ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். சில தலைவர்களின் அநாகரீகமான நடத்தையை நாம் ஊக்குவிக்கக் கூடாது” என்றார்

மேலும், “சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளை பொதுமக்கள் பார்ப்பது வழக்கம். எனவே, தலைவர்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்யாமல் மக்கள் நலன் பற்றி பேச வேண்டும். இளைஞர்கள் நல்ல அரசியல்வாதிகளை ஆதரித்து அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். இளைஞர்களும் அரசியலில் வாய்ப்பு பெறலாம்" என்று கூறிய அவர், இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்றார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் ஹிண்டன்பர்க்-அதானி வழக்கில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பல நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கின. லண்டன் கருத்துகளுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவும் போராட்டத்தில் குதித்தது.

SCROLL FOR NEXT