தமிழிசை சவுந்தரராஜன் 
அரசியல்

ஆளுநர் உரையை வாசிக்கவிடாத தெலங்கானா அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்... தமிழக அரசுக்கு தமிழிசை எச்சரிக்கை!

காமதேனு

நேற்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறு எனவும் அவர் சில கருத்துகளை சொல்லி இருக்கக்கூடாது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில், நேற்று மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் தழிசை சவுந்தரராஜன் அங்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜிப்பர் மருத்துவமனையில் மருந்து இலவசமாக கிடைத்தாலும், சில மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையலாம்” என்று தெரிவித்தார்.

ஜிப்மர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசு எதையுமே செய்யாது என்பதற்கு உதாரணம் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். குளிப்பதற்கும், பயணிகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஆளுநர் உரை முடிந்தவுடன் தேசிய கீதம் இசைத்து விட்டு ஆளுநரை வழியனுப்ப வேண்டும். இதுதான் முறை. ஆனால், தமிழக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு. அவர் சில கருத்துக்களை சொல்லி இருக்கக் கூடாது” என்றார்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்

மேலும் பேசிய அவர், ”தெலங்கானாவில் ஆளுநர் உரை வாசிக்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஆளுநர் உரையை வாசிக்கவிடாத அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் சரி சட்டசபையில் ஆளுநர் உரையாக இருந்தாலும் எங்களை யாரும் எதுவும் கேட்கக்கூடாது, நாங்கள் செய்வதுதான் சரி என்ற போக்கை ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, ”அது வதந்தி... வதந்தீ... வதந்தீ..!” என்று மூன்று முறை சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

SCROLL FOR NEXT