அரசியல்

ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு - அக்காலத்தில் ஏது இந்து?: திருமாவளவன் சீற்றம்

காமதேனு

ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. அக்காலத்தில் ஏது இந்து என இயக்குநர் வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறனின் கருத்து தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு

முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா?

இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” என குறிப்பிட்டுள்ளார்

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அவர்களின் 60-வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ‘கலையை இன்று நாம் சரியாகக் கையாள வேண்டும். இதனைக் கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்’ என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT