செய்தியாளர் சந்திப்பில் பெங்களூரு புகழேந்தி
செய்தியாளர் சந்திப்பில் பெங்களூரு புகழேந்தி  `பாஜகவை பார்த்து பயமில்லை, மரியாதைதான் இருக்கிறது'- சொல்கிறார் புகழேந்தி
அரசியல்

`பாஜகவை பார்த்து பயமில்லை, மரியாதைதான் இருக்கிறது'- சொல்கிறார் புகழேந்தி

காமதேனு

``கலைஞரின் எழுத்துக்கு என்று தனி மரியாதை உள்ளது. ஆனால் பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி கூறியுள்ளார்.  

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில்  எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதை ஏற்றுக் கொள்கிறோம். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொண்டு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். பொதுமக்களின் கருத்தும் அதுவாகத்தான் உள்ளது.

எனவே உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வத்துடன் கலந்தாலோசித்து ஈரோடு தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசித்து முடிவெடுக்கும் பட்சத்தில் அவரது சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.

சசிகலாவிற்கு எடப்பாடி துரோகம் செய்துள்ளார். ஏற்கெனவே நடந்து முடிந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக  மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியே  முழு பொறுப்பாவார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. பாரதிய ஜனதாவை பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஒரு கொள்கை. அந்த கட்சியை கண்டு எங்களுக்கு பயமில்லை. மரியாதைதான் உள்ளது.

திராவிட இயக்கத்திற்கு 55 ஆண்டு கால வரலாறு உள்ளது. பேனாவை வைத்துத்தான் கலைஞரை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கலைஞரின் எழுத்துக்கு என்று தனி மரியாதை உள்ளது. ஆனால் பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT