அரசியல்

`சமூகநீதியின் அடிவேரை வெட்டுகிறது மத்திய அரசு'

காமதேனு

"மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் வரும் 31-ம் தேதி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்காக இந்தக் கல்வி ஆண்டு முதல் கட்டாய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பு மாணவர்களின் மீது ஒன்றிய அரசு தொடுத்துள்ள அடுத்த கட்ட தாக்குதலாகும்.

மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்த தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும் என்றும், எனவே மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள யூ.ஜி.சி, அத்துடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு எந்த வெயிட்டேஜும் இந்த மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கையில் தரப்படாது என்றும் அறிவித்துள்ளது. இது குலக்கல்வியைக் கொண்டுவருவதற்கான திட்டத்தின் புது அவதாரமாகும்.

மாநிலப் பள்ளிகளில் படித்த கல்வியை மதிப்பில்லாமல் ஆக்கி, பன்னிரண்டாம் வகுப்பில் பெறும் பொதுத்தேர்வு மதிப்பெண்களை மதிப்பற்ற எண்களாக்கிடும் இந்தப் போக்கு கல்வித் துறை, சமூகநீதியின் அடிவேரை வெட்டுவதாகும். அத்துடன், கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவும், ஏழை, எளிய மக்களை உயர் கல்வியிலிருந்து துரத்தியடிக்கவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இந்தத் தேர்வை பிற கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு, இத்தகைய நுழைவுத் தேர்வை அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிவாக்கும் சதித் திட்டத்தின் ஒரு முனையே ஆகும்.

இதனை தொடக்கத்திலேயே ஒழித்துக் கட்ட வேண்டியது அவசர அவசியமாகும். மருத்துவக் கல்லூரிக்கு ‘நீட்’ என்னும் தடைச் சுவரை எழுப்பியுள்ளது போல், கல்லூரிக் கல்வி அனைத்துக்கும் இந்த CUET பெருந்தடையாக அமையும். இன்னொரு புறம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களைத் தேர்வு செய்யும் உரிமையைக்கூட மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிடமிருந்து பறிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இப்படி பல்முனைத் தாக்குதலைத் தொடுத்திருக்கும் வேளையில், அதற்கெதிராக வரும் 31-ம் தேதி மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ள திருவாரூரில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட, மண்டல கழகப் பொறுப்பாளர்கள், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் முன்னின்று இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம்" என்ற கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT