அரசியல்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் திடீர் பரிசோதனை: இரவு நடந்தது என்ன?

காமதேனு

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று இரவு திடீரென மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேற்றிரவு அவர் சென்றார். அங்கு அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதன் பின் பரிசோதனையில் முதல்வருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண முதுகு வலி என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிந்த பிறகு அவர் நேற்றிரவே வீடு திரும்பிவிட்டார். இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அடுத்து கரோனாவிலிருந்து மீண்டார் . இதன் பின் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கரோனா மீண்டும் ஏற்பட்ட சூழலில் தற்போது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சியினரும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அவருக்கு ஏற்பட்டது சாதாரண முதுகுவலி தான் என்பது பரிசோதனையில் உறுதியானதால் அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT