பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், சட்ட விரோத பண பரிவர்த்தனையின் கீழ் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறையில் பணத்தை வாங்கிக்கொண்டு பலருக்கு சட்ட விரோதமாக வேலையை கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தான் மேல்முறையீடு செய்ய வர வேண்டுமே தவிர நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியது. அப்போது, பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அதனால்தான் மேல்முறையீடு செய்கிறேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை விடுமுறைக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படுவதாக என அறிவித்தது.