அரசியல்

அனுமதியின்றி திடீர் போராட்டம்: அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

காமதேனு

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், 370 பாஜகவினர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் கடந்த 26-ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திமுக எம்.பி கனிமொழி வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 370 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT