உணவகத்தை திறந்து வைத்தார் நிதி அமைச்சர்
உணவகத்தை திறந்து வைத்தார் நிதி அமைச்சர் 
அரசியல்

`யார் வேண்டுமானாலும் வாயில் வடை சுடலாம், எத்தனையோ வாக்குறுதிகளை கொடுக்கலாம்': யாரை சாடுகிறார் நிதியமைச்சர்?

காமதேனு

"யார் வேண்டுமானாலும் வாயில் வடை சுடலாம், எத்தனையோ வாக்குறுதிகளை கொடுக்கலாம். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற்றுவது திமுக ஆட்சி" தான் என்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அம்மன் சேவைப்பிரிவு உணவகத்தை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், உணவக உரிமையாளரும் திரைப்பட நடிகருமான சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குத்துவிளக்கு ஏற்றிய மருத்துவமனை முதல்வர்

நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "எங்களது முதல்வர் மற்றும் ஆட்சியின் சிறந்த அடையாளங்களாக கருத்தப்படுவது திராவிட இயக்கத்தின் முதன்மையான மனிதநேயம் ஆகும்.

இரண்டாவது செயல்திறன், யார் வேண்டுமானாலும் வாயில் வடை சுடலாம், எத்தனையோ வாக்குறுதிகளை கொடுக்கலாம். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற்றி தந்துள்ளதோடு, மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதி கொடுத்து இருப்பது எங்களது ஆட்சியின் செயல் திறனுக்கு சான்றாகும்.

இது சாதாரண உணவகமாக தெரியலாம். ஆனால், இதன் பின்னால் மாபெரும் வெற்றி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் இன்னொரு நபர் இதனை நடத்தி வந்தார். ஜனவரி மாதம் அதன் டெண்டர் முடிந்த போது அரசுக்கும், இந்த மருத்துவமனைக்கும் வந்து கொண்டிருந்த மாத வருமானம் ரூ. 7000 ஆகும். புதிதாக டெண்டர் விடப்பட்டு தற்போது, அரசுக்கு இந்த மருத்துவமனைக்கு கிடைக்க உள்ள மாத வருமானம் ரூ. 1 லட்சம் ஆகும்.

மேலும், தரமான உணவு பொருட்களை குறைவான விலைக்கு கொடுப்பதை இலக்காக கொண்டுள்ளது. ஏற்கெனவே துயரத்தில், உடல் ரீதியான பிரச்சினைகளோடு இங்கு வருபவர்களுக்கு குறைவான விலையில் தரமான உணவை தர வேண்டும் என யோசித்து வெளிப்படை தன்மையுடன் டெண்டர் விடப்பட்டு சிறப்பான நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனிதநேயமும், செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் சிறந்த அடையாளங்களாக இருக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT