அரசியல்

தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை விடுமுறை அவசியம்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்துவதன் நோக்கம் என்ன?

காமதேனு

தமிழகத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வேகமாகக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாணவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வேகமாகக் காய்ச்சல் பரவிவருகிறது. மருத்துவமனைகளில் அதிக அளவு குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களைப் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசு ஒரு வாரம் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவி வருகிறது.

எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாகப் பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்குச் சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களைத் தமிழக அரசு நடத்த வேண்டும். குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் ” எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT