அரசியல்

`15 ஆண்டுக்காலம் கட்சியை நடத்தியதே நமது சாதனைதான்’: காரணத்தை சொன்ன சரத்குமார்!

காமதேனு

``இப்போது உள்ள சமூக வலைதளங்கள் அப்போது இருந்திருந்தால் நான் அன்றைக்கே முதல்வராக ஆகியிருப்பேன்'' என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சரத்குமார், நலிந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது, ”நமது கட்சியில் இருப்பவர்கள் அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகம், சமத்துவம் என அனைத்தும் பேசக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். தொண்டர்கள் மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் அவர்களும் தலைவர் ஆகலாம். இந்த நாட்டையே ஆளலாம். நமது கட்சிக்கு பெரிய அளவிலான பண பலம் இல்லை. பெரிய அளவிலான பொருளுதவியும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் நாம் 15 ஆண்டுக்காலம் இந்த இயக்கத்தை நடத்தி வந்ததே பெரிய சாதனைதான்.

அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல சேவை செய்வதற்கும்தான். தற்போது இருக்கும் செல்போன், வீடியோ கேமரா, சமூகவலைதளங்கள் என அப்போது எதுவும் கிடையாது. அத்தகைய வசதிகள் இருந்திருந்தால், நாம் செய்த தொண்டிற்கு அப்போதே நான் முதலமைச்சராக ஆகி இருக்க முடியும். எந்த ஒரு மனிதனின் கையைக் கீறினாலும் ரத்தம் தான் வரும். என்னைப் பள்ளியில் சேர்க்கும் போதே எனது அப்பா என் சாதியை ‘மனித சாதி’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் எனக்குப் பல கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. நாடு முன்னேற வேண்டுமானால், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாதிப்புக்களை முன்பே தடுக்க வேண்டும். அதைவிடுத்துப் பின்னோக்கி சென்று ஆராய்ச்சி செய்வது தேவையில்லாதது” என்றார்.

SCROLL FOR NEXT