அரசியல்

அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்பு: நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிபிசிஐடி முடிவு

காமதேனு

அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களோடு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அலுவலகத்திலிருந்த கோப்புகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக சி.வி. சண்முகம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக அலுவலக கலவரத்தில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடியினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 113 ஆவணங்களும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT