"ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த நிலையில், விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன்" என்று சசிகலா கூறினார்.
நாகை மாவட்டம், நாகூரில் நாளை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சசிகலா இன்று காலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அரசியல் பயணத்தை எப்போது தொடங்குவீரர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஆன்மிக பயணத்தை நிறைவு செய்த நிலையில், விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன் என்றார்.
அரசியல் பயணம் தனியாகவா? கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா கூறினார்.
தங்களை வரவேற்கும் அமமுகவினரை தினகரன் நீக்குகிறாரா? என்ற கேள்விக்கு, அப்புறம் பதில் அளிக்கிறேன் என்றார் சசிகலா. அதே நேரத்தில், கோடநாடு வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்க சசிகலா மறுத்துவிட்டார்.