பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன் 
அரசியல்

`பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது'- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

காமதேனு

``பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது'' என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

மதுரை தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி தமிழ் சங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினாராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "சுயநலத்துக்காக கொள்கை, இலக்கு என பல காரணத்திற்காக பலர் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால், சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கிடைக்கும் வகையில் அரசு இயங்க வேண்டும் என்ற கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன் நான்.

பண ஒதுக்கீடு, திட்டங்கள் என அனைத்திலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பயன் அடைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தனியார் நிறுவனங்கள் பல்வேறு சுய கட்டுப்பாட்டுடன் தங்களது ஊழியர்களை நடத்த முடியும். ஆனால், அரசு அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோரால் செய்ய முடியும்.

உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக நாடுகளில் சமத்துவம் இல்லை என்பதே பிரச்சினையாக இருந்து வருகிறது. நீதிக் கட்சி செய்தது போல் கல்வியை பெண்களுக்கு வழங்க வேண்டும். கல்வி இல்லையென்றால் எதுவும் மாறாது.

குஜராத் உள்ளிட்ட எந்த மாடலாக இருந்தாலும் கல்வி வழங்கவில்லை என்றால் வளர்ச்சி இருக்காது. தமிழகம் கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக உள்ளது. அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக மதுரையில் முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளில் பொருளாதார சரிவில் இருந்த தமிழகம் மீண்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. 24 மாதங்களில் மதுரை மிகப் பெரிய தொழில், பொருளாதாரம், வேலை வாய்ப்பு வளர்ச்சி பெறும்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT