அரசியல்

கோடநாடு வழக்கில் சிக்கியவருக்கு அதிமுகவில் முக்கிய பதவி!

காமதேனு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் புறநகர் மாவட்டத்திற்கான தேர்தல் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் அர்ஜூனன், நீலகிரி மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் செயல்பட்டனர். இதில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, அவரது நண்பர் ஆத்தூர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தார். இந்த நிலையில், அதிமுக தலைமையிலிருந்து அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இளங்கோவனை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆத்தூர் இளங்கோவன் சேலம் புறநகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் இளங்கோவனை அதிமுக தலைமை மாவட்டச் செயலாளராக அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT