அரசியல்

மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள்: ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு போலீஸ் குவிப்பு!

காமதேனு

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் மூன்று இடங்களிலும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கியிருப்பதாகவும், 23 இடங்களில் உள்ளரங்குகளில் பேரணி நடத்தவும், 24 இடங்களை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் 500 இடங்களில் தமிழக அரசு அனுமதி வழங்கியதையும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, தமிழக உளவுத் துறையின் அறிக்கையை ஆராய்ந்து, எஞ்சிய 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக நவம்பர் 4-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், “சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களைத் தவிர்த்து, ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 3 இடங்கள் உள்பட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ள போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். பேரணியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து 3 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெறுகிறது. இதற்கு அனுமதி வழங்கியுள்ள கடலூர் போலீஸார் பேரணி துவங்க இருந்த இடமான திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மேலும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனைகளும் நடைபெற்று வருகின்றது. இதே போன்று கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூரிலும் பேரணி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT